இதுவே பூரி உருளை மசாலின் அவதாரம்
நான் தான் கோதுமை அடிக்கடி பூரி அவதாரம் எடுப்பேன்
பக்தர்களுக்காக
என்னை சிறிதளவு ரவையுடன் இதமாய் பதமாய்
பிசைந்தால் பூரி மாவாவேன் நான்
ஒரு அகல வாணலியில் தங்க நிற எண்ணெய் ஊற்றி
சிறிது நேரம் பொறுமையாய் காத்திருக்க
அந்த எண்ணெய் என்னும் வெப்ப நீச்சல் குளத்தில்
நான் குதித்து மூழ்கி திடீரென்று உப்பி எழுவேன்
அது தான் மொறு மொறு உப்புலி அவதாரம் போல
உப்பி ருசியாய் பூரியாய் மாறி வருவேன் பொன்னிறத்தில்
எனக்கு ஜோடியாய் ஒரு உருளை கிழங்கு
என்னும் தேவதை கிடைத்தாள்
அவள் எனக்காக முழு ஆவியில் வெந்து
அனைத்தையும் சகித்து கொண்டாள்
வாணலியில் சிறிது எண்ணெய் தேக்கி அதில் கடுகு மற்றும்
கடலைப்பருப்பு என்னும் சிறு சேவகர்களை தாளித்து
வெங்காயம் ,தக்காளி ,மஞ்சள் தூள் பச்சை மிளகாய்
என்னும் அடுத்த வீரர்கள்
அடுத்தடுத்து வரிசையாய் வதக்கி
உப்பு என்னும் விசுவாசியை அளவோடு சேர்த்து
நன்கு கலக்க வேண்டும்
பின் நன்கு வெந்து வதங்கி வருகையில்
வெந்த உருளை கிழங்கு தேவதையை அதில்
சிறு சிறு துண்டுகளாக்கி உள்ளே அந்த கலவையில் சேர்த்து
அனைத்தையும் கலக்க சிறிது நேரம் வதக்கி விட
ருசியான உருளை மசால் தயாராகி விடும்
நான் ஒவ்வொரு மனிதரின் நாவிற்கும் அடிமையாய்
இருந்து ருசியை பரப்பும் சேவை செய்கிறேன்
இதுவே பூரி உருளை மசாலின் அவதாரம்
எழுதியவர்
சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

2 comments:
Miga alagana padhivu… vasithavudan poori saapidum ennam vandhu vittathu 😇
nandri nandri nandri .neengal saapitu rusiyungal poori masalai
Post a Comment